![]() |
![]() |
சர் சி.வி. இராமன் - தொடர்ச்சி
பௌதிகத்தில் ஆர்வம் கொண்ட இராமனுக்கு, கொல்கத்தாவில் கண்ணில் பட்டது, "இந்தியாவின் விஞ்ஞான அபிவிருத்தி சங்கம்" என்ற பெயர்ப் பலகை. உடனே அதில் அங்கத்தினராக சேர்ந்துவிட்டார். நாளடைவில் அவருக்கு அமிருதலால் சர்கார் சங்கத்தின் காரியதரிசி, கொல்கத்தா ச்ர்வகலாசாலையின் உப நிர்வாகத் தலைவர் அஷுடோஷ் முகர்ஜி, பேரறிஞரான சர் குருதாஸ் பானர்ஜி இவர்கள் அறிமுகமானார்கள். இவர்கள் யாவரும் இராமன்பால் மிக அன்பு கொண்டிருந்தனர். சங்கம் இராமனை வளர்த்துத் தானும் வளர்ந்தது.
மூன்று ஆண்டுகளில் இராமன் பௌதிகத்தில் பல ஆராய்ச்சியுரைகளை வெளியிட்டார். 1910 ம் ஆண்டு இரங்கூனுக்கு மாற்றப்பட்டார். இரங்கூனுக்கு இவர் சென்ற சில நாளைக்குள் இவர் தந்தையார் இறந்துவிட்டார். அதனால் ஆறு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். ஓய்வுக் காலம் முடிந்ததும் நாக்பூருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து அகௌண்டண்டு ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று, கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டார். இராமனின் உள்ளம் பூரித்தது. விஞ்ஞான சங்கமும் இவரை வரவேற்றது. 1914ஆம் ஆண்டு உலக சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான ஆண்டு. கொல்கத்தா சர்வ கலாசாலைக்கு இறக்கை முளைத்தது. தாரநாத் பாலிட் என்பவரும் ராஷ் பிகாரி கோஷ் என்பவரும் நிதி உதவி செய்தனர். சர்வ கலாசாலையில் ஆராய்ச்சி நிகழ்த்தத் தக்கதான "விஞ்ஞானக் கல்லூரியும் ஏற்பட்டது. அகௌண்டண்டு பதவியை விட்டு, விஞ்ஞானக் கல்லூரியில் தலைமை ஸ்தானத்தை இராமன் ஏற்றார். இராமனின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணமாய் இருந்தன. பேரும் புகழும் இராமனை நாடின. 1921ஆம் ஆண்டில் கொல்கத்தா சர்வ கலாசாலை இவருக்குப் பேராசிரியர் பட்டமளித்தது. 1924ல் இலண்டனிலுள்ள 'ராயல் சங்கம்" (Royal Society London) இவரைத் தோழராக ( Fellow) தேர்ந்தெடுத்தது. மேலை நாடுகளிலிருந்து இவர் சொற்பொழிவு ஆற்ற அழைப்புகள் வந்தன. இராமனின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் 1924-ல் ஆரம்பித்தது. முதலில் இலண்டனுக்கும், பிறகு கனடாவிற்கும் சென்றார். அமெரிக்காவிலேயே முதன்மை பெற்ற இராபெர்ட் ஆண்ட்ரூ மில்லிகன், பாஸ்டேணாவில் (Pasadena) இருந்த தன்னுடைய ஆராய்ச்சிக் கழகத்திற்கு வந்து சொற்பொழிவு ஆற்ற இராமனை அழைத்தார். மில்லிகனின் ஆராய்ச்சிக் கழகம் மிகவும் பேர் பெற்றதாகும். இராமன் கனடாவிலிருந்து புறப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாடு, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் பல தேசங்களுக்குச் சென்றார். ஆங்காங்கே நடந்த " விஞ்ஞானப் புலவர் மகாநாடு"களின் விவாதங்களிலெல்லாம் இராமன் தலைசிறந்து விள்ங்கினார். இது காரணமாக நோபெல் பரிசு பெற்ற பல பேரரிஞர்களின் நன்மதிப்பைப் பெற்றார். "இராமன் நிகழ்ச்சி" (Raman effect) என்னும் நூதனத்தைக் கண்டுபிடித்ததற்காக சி.வி. இராமன் 1930ஆம் ஆண்டு நோபெல் பரிசு அளிக்கப்பட்டார். இந்தக் கண்டுபிடிப்பு இரசாயன ஆராய்ச்சிக்கே ஒரு பெரிய ஊன்று கோலாகும். எவ்வாறெனில் குறித்த பண்புகளையுடைய ஒரே வகை கிரணங்களினால் ஏற்பட்ட குறித்த மாறுபாட்டைக் கொண்டு திராவகத்திலுள்ள கூட்டணு எத்தகைய அமைப்பைப் பெற்றுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இது காரணம் பற்றியே "இராமன் நிகழ்ச்சி" உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இராமன் நிகழ்ச்சியைப் பற்றி மேலை நாடுகளில் மட்டும் 1700 ஆராய்ச்கி உரைகளுக்கும் அதிகமாக வெளிவந்திருக்கின்றன என்பதே அது பௌதிகத்தின் பெரு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் என்பதனை அறிவிக்கும். வாயுப் பொருள்களின் காந்த சக்தி; கீத வாத்தியங்களின் தொனித் தத்துவம்; செவிக்கெட்டாத தொனி விளக்கம் முதலிய பல துறைகளில் இவர் விசேஷ ஆராய்ச்சிகளை வெளியிட்டிருக்கின்றார். அறிவை வளர்ப்பவனும், இளைஞரை ஆராய்ச்சித் துறையில், 'எவர்க்கும் இவர் பிற்பட்டவர் அல்லர்' என்ற முறையில் தேர்ச்சி செய்விப்பவனும், தன் ஜன்ம பூமிக்கு மிகவும் மேலான தொண்டு ஆற்றுபவனே ஆவான். மேனாட்டுக்கு செல்லாமலேயே நம் நாட்டு இளைஞர், சாஸ்திரப் பயிற்சியில் முதன்மை பெற வேண்டும் என்னும் இவரது உள்ளக் கருத்தினை இவர் பிரசங்கங்கள் ஒவ்வொன்றிலும் காணலாம். 1929ஆம் ஆண்டு இராமன் "ஸர்" பட்டம் அளிக்கப்பட்டார்.கொல்கத்தா சர்வகலாசாலையில் பதினைந்து ஆண்டுகள் இருந்த பின் 1933ல் இவர் பெங்களூர் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தலைவருமானார். இராமன் பெங்களூர் வந்த பிறகு, அந்த ஆராய்ச்சிக் கழகம், பௌதிகத்தில் இந்தியாவில் முதன்மை பெற்று விளங்குகிறது. தம் மனம் எதனை நாடியது என்றறிந்ததும், தம்மைக் கட்டிய தளைகள் அனைத்தையும் களைத்தெறிந்து, பொன், புகழ், பதவி முதலியவற்றில் ஒன்றிலும் நாட்டமில்லாமல், ஆராய்ச்சியிலேயே தன் வாழ்நாள் முழுவதும் கழித்த பெரியாருள் இராமனும் ஒருவராவர். 1970ஆம் ஆண்டு இராமனுடைய உடல் நிலை க்ஷீணமடைய ஆரம்பித்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அவர் டாக்டரிடம், "இந்த உடல் பாதிப்பிலிருந்து குணமாகி 100 சதவிகிதத்திற்குக் குறையாமல் என்னுடைய ஆரோக்யமும், செயல்கள் சுறுசுறுப்பாய் இருக்குமானால் தவிர நான் பிழைத்திருக்க விருப்பமில்லை என்று கூறினாராம். உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்ததும் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர் வெளியில் தோட்டத்தில் உலாவும் வழக்கம் உடையவர். அது கூட முடியமல் அறையிலேயே இருந்தார். அப்பொழுது அவர் சொன்னார், " நான் இந்த அறையில்தான் சாகப்போகிறேன் என்று தெரிந்திருந்தால் இந்த ஜன்னல்களைத் தாழ அமைத்திருப்பேன் என்றாராம். சுற்றி இருந்தவர்கள் முதலில் இதைக் கேட்டுத் திகைத்தாலும், பிறகு தான் படுத்திருக்கும் இடத்திலிருந்து தோட்டத்திலிருந்த மரங்களையும், செடிகளையும், பூக்களையும் பார்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார் என அறிந்து அவர் படுத்திருந்த கட்டிலை உயர்த்தித் தோட்டம் தெரியும்படி வைத்தார்கள். 21-ம் நாள் நவம்பர் மாதம் 1970 சனிக்கிழமை அவர் இறைவன் திருவடி சேர்ந்தார். இன்ஸ்டிட்யூட் இருந்த காம்பௌண்டிலேயே அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த சுற்றுப்புறத்திலேயே அவர் பூத உடல் தகனம் செய்யப்பட்டது. அவர் விருப்படியே சடங்குகள் ஏதும் இன்றி நடந்தேறியது. ஆயிரக்கணக்கில் ஜனங்கள் இறுதி அஞ்சலி செலுத்தக் கூடியிருந்தனர். அந்த இடத்தில் ஒரு செடி நடப்பட்டது. அது இப்பொழுது (1986) மரமாகி முதன் முறையாகப் பூத்து குலுங்குகிறது என்று ஜி.வெங்கடராமன் தான் எழுதிய "JOURNEY IN TO LIGHT" ( 1986 ல் வெளிவந்தது) புத்தகத்தில் குறிப்பிடுகிறார். முற்றும். |
Your Feedback for this Article |