தான் ஒரு பாரிஸ்டர் (Barrister) ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் Brighton, Londonல் ஒரு பள்ளியில் 1878ல் சேர்ந்தார். பிறகு லண்டன் சர்வகலாசாலையில் படித்தார். ஆனால் பட்டம் பெறாமலேயே 1880ல் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883ஆம் வருடம் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழைந்தைகள் பிறந்தன. ஆனால் நான்கு குழைந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1902ல் மனைவி இறந்து போனார்.
1895ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.
1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார்.அங்கு அவர் ஒரு ஆச்ரமத்தை நிறுவினார். அது ஒரு பிரர்த்தனைக் கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலையுடன் மரங்களும், செடிகளும் கொண்ட பூஞ்சோலை யாக மிளிர்ந்தது.
1913ல் அவர் நோபெல் பரிசு இலக்கியத்திற்காக (for Literature) தன்னுடைய படைப்புகளுக்காகப் பெற்றார். 1915ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தாகூருக்கு Knighthood பட்டம் அளித்தது.
1921ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.
1905ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் கூறுகின்றார்..
இக்காலத்தில்தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அடிமையையும் கண்டதுடன் அவர்கள் அடைந்திருந்த தாழ் நிலையையும் கண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.
1919ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயரால் அளிக்கப்பட்ட "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்திருக்கின்றார்.