பச்சைக்கிளி ...ஒரு கூண்டில்
ராமு:
பச்சைக்கிளியே, பச்சைக்கிளியே
என்ன, உம்முன்னு இருக்கிறாய்?
என்ன கோபம் சொல்வாயா?
வைத்த பழம் பிடிக்கலியா?
தினம் என் கையில் வருவாயே!
இன்று மட்டும் நகர்ந்து போகிறாயே,
பச்சைக்கிளியே, பச்சைகிளியே
என்ன, உம்முன்னு இருக்கிறாய்?
என் அன்பு உனக்குத் தெரியாதா?
உன் மேல் பாசம் புரியாதா?
பள்ளியிலிருந்து ஓடி வந்தேனே!
உன் கீ.. கீ-- குரல் கேட்க வந்தேனே!
இந்தக் கூண்டு உனக்குப் பிடிக்கவில்லையா?
பூனையின் இம்சை தாங்கவில்லையா?
பச்சைக்கிளியே, பச்சைக்கிளியே
ஏன் இன்று உம்முன்னு இருக்கிறாய்?
கிளி:
வா வா ராமு சொல்லுகிறேன் நான்,
கூண்டை விட்டுப் போகிறேன் நான்.
நீ உன் நண்பர்களுடன் விளையாட
என்னை மட்டும் கூண்டில் அடைத்தது ஏன்?
என் இனத்துடன் என்னைப் பறக்க விடு
இந்தச் சிறையின் கதவைத் திறந்து விடு
காலை சூரியோதயம் ரசிப்பேன் நான்,
மாலை என் இனத்துடன் பறப்பேன் நான்
சுதந்திரப் பறவை நான் தானே
கூண்டில் அடைப்பதும் தவறுதானே!
ராமு:
பச்சைக்கிளியே, பச்சைக்கிளியே
என் மனக் கண்ணைத் திறந்து விட்டாய் நீ
கதவைத் திறந்தேன் பறந்து போ
நடு நடுவே என்னைப் பார்த்துப் போ
அன்புடன் அம்மம்மா விசாலம்