Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

முருகனுக்கு அரோகரா

இணையப் பாட்டி

image: Palani Andavar, courtesy: Palani.org image: Thaipusam kavady, courtesy: Palani.org

காவடி

அன்பு குழந்தைகளே,

நல்லாசிகள். நீங்கள் ஸ்கந்த ஷஷ்டி, தைப் பூசம் போன்ற முருகனின் சிறப்பு நாட்களில் காவடிகளை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி என்று பல வகைக் காவடிகளைப் பார்த்திருப்பீர்கள் இந்தக் காவடியைப் பற்றிய ஒரு புராணக் கதையைப் பார்ப்போமா?

ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இடும்பன் ஒருவன் தான் சூரபத்மன் வழியில் வந்தவர்களில் எஞ்சிநின்றான். சூரபத்மனும், சுராசுரனும் ஸ்ரீமுருகப் பெருமானால் அழிக்கப்பட்டனர். இடும்பன் எல்லோருடைய தவறுக்கும் வருந்தி மன்னிப்புக் கேட்டான், அன்றையத் தினத்திலிருந்து முருக பக்தன் ஆனான்.

அந்த இடும்பன் அகஸ்திய மகா முனிவரின் வேலையை, அதாவது இரு மலைகளையும் தூக்கிப் போகும் வேலையை ஒப்புக்கொண்டான். இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து ஸ்ரீ முருகனையே நினத்துக்கொண்டு பழனி வந்தான். சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான், முடியவில்லை. பல தடவைகள் முயன்றும் அசைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கந்தனை நினைக்க, ஒரு சிறுவன் கோமணத்துடன் தோன்றினான். தனக்கு மேலே ஏறிப் போக வேண்டும் அதனால் இந்த மலைகளை நகற்றச் சொன்னான். இடும்பனால் நகற்ற முடியவில்லை. பின் சிறு சண்டை ஆரம்பித்து, பெரிய சண்டையில் இடும்பனை அந்தச் சிறுவன் அடிக்க இடும்பன் இறந்தான். உடனே அந்தச் சிறுவன் முருகனாகக் காட்சி அளித்து இடும்பனைப் பிழைக்க வைத்தார். இடும்பனுக்கு வந்தது முருகப் பெருமானே என்று தெரிந்து வணங்கினான். அப்போது அவன் ஸ்ரீமுருகனிடம் கேட்டுக் கொண்டான், "யார் இதைப் போல் தோளில் காவடி போல் சுமந்து வருகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் ." என்று. அவர் குடி கொண்டிருக்கும் கோவில் வாசலில் என் சிலை இருக்க வேண்டும், வரும் பகதர்கள் என் சிலையை வணங்கிவிட்டுத்தான் உள்ளே போகவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். ஸ்ரீ முருகனும் அங்கனமே அருளினார். அதனால் தான் இடும்பன் முருகன் கோவிலில் முதலிலேயே காட்சி அளிப்பார்.

இப்போது காவடிகளைப் பார்ப்போம். காவடி என்பது இரு குடங்களில் பாலோ அல்லது தேனோ, இள்நீரோ நிரப்பி, அதை ஒரு கம்பில் இரு பக்கங்களும் தொங்க விட்டு. தோளில் தூக்குவது, பல வேல்களைப் பூக்களுடன் அமைத்து ஒரு பெரிய வில் போல் கம்பை வளைத்து, அதன் கீழே தூக்குவதற்கேற்ப ஒரு நீண்ட சட்டம் கொடுத்துத் தோளில் சுமப்பது போன்றவைகள் ஆகும். இதைத் தவிர சிலர் அலகு என்றுச் சொல்லப்படும் ஒரு நீண்ட ஊசியை ஒரு கன்னம் வழியாகக் குத்திக் கொண்டு மறு கன்னம் வழியாக வரவழைத்துப் பிரார்த்தனைச் செலுத்துவார்கள்.

சிலர் 108 வேல்களை உடலில் குத்திக்கொண்டு முருகப் பெருமானிடம் மனதார ஒன்றி விடுவார்கள். சிலர் அக்னி மூட்டி அதன் மேல் நடப்பார்கள். அதற்குத் தீ மிதித்தல் என்று பெயர். மனம் முருகனிடம் ஒன்றி விடுவதால் வலி தெரிவதில்லை, இரத்தம் வருவதில்லை. விழா முடிந்தவுடன் அந்த இடத்தின் மேல் விபூதி பூச வடுக்களும் இருப்பதில்லை. இவை எல்லாம் முழு நம்பிக்கையின் ஆதாரத்தில் தான் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இந்தக் காவடிகள் எடுக்கப்படுகின்றன. இந்தத் தைப்பூசம் அன்றுதான் வள்ளியை முருகன் திருமணம் செய்துக் கொண்டாராம்.

நாமும் தைப் பூசம் அன்று முருகனின் நாமம் சொல்லுவோமே,

வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,
வெஞ்சமரில் "அஞ்சல்" என வேல் தோன்றும் நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.

அன்புடன் அம்மம்மா விசா_

இணையப் பாட்டி பக்கம்

Your Feedback for this Article

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?

* Required