நதி எங்கே போகிறது?
அன்பு குழந்தைகளே,
நதிகளை நாம் பார்த்திருக்கிறோம், எவ்வளவு அழகாக ஓடுகி்ன்றன? சில இடங்களில் வளைந்தும், சில இடங்களில் மிக வேகமாகவும், சில இடங்களில் அமைதியாகவும் போவதைப் பார்த்து நாம் பரவசமடைகிறோம். சில புண்ணிய நதிகளை பூஜையும் செய்கிறோம். சிலர் வீட்டில் பூஜை செய்யும் போது சில புண்ணிய நதிகளுக்கும் பூஜை செய்வார்கள் "கங்கை, யமுனை, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி முதலிய நதிகள் இந்தக் கலசத்தில் வரவேண்டும் என்று ஸம்ஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வார்கள்.
இப்போது நதியைப் பார்த்து நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போமா? நதி தன்னலம் கருதாமல் எல்லோருக்கும் உதவி புரிகிறது. கல், முள், மேடு பள்ளம் போன்ற இடங்களில் சலிக்காமல் ஓடுகிறது. கடைசியில் தன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்து கடலில் கலக்கிறது. சாதி பேதம் பார்க்காமல், பணக்காரர், எழை என்று பார்க்காமல்
எல்லோருக்கும் சமமாக நீர் வழங்குகிறது. உச்சியிலிருந்து விழுந்தாலும் மனம் கலங்காமல் மேலே வழியைத் தொடர்கிறது.
பார்த்தீர்களா! எவ்வளவு பாடம் கற்றுக் கொள்கிறோம், நீங்களும் தோல்வி ஏற்பட்டாலும் மனம் கலங்காமல் மேலே பயணம் செய்ய வெற்றி நமக்கே. தேவைப் பட்டால் வீரமாகவும் நதியைப் போல் சுழல வேண்டும். மற்ற நேரத்தில்
அதே நதியைப்போல் பணிவாக, தெளிவாக, சாந்தமாக இருக்க வேண்டும். பார்த்தீர்களா இயற்கையிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்ள முடிகிறது. நாம் இயற்கையோடு ஒன்றி வாழ்வோமே.
நதியின் தியாகம்
இதைப் பாடிப் பாருங்கள்
நதியே உன் ஓட்டமென்ன?
வழியில் ஆடும் ஆட்டமென்ன?
பாம்பு போல் வளைகிறாய்,
பள்ளங்களில் விழுகிறாய்
மின்சாரம் தருகிறாய்,
மின்னலெனச் சுழல்கிறாய்,
சாதுவாகவும் ஆகிறாய்,
சடுதியிலும் போகிறாய்.
எத்துணை இடர்கள் பட்டாலும்
பொருட்படுத்தாது ஓடுகிறாய்,
கல்லும் முள்ளும் குத்தினாலும்,
கவலையின்றிப் பாய்கிறாய்,
பாகுபாடு ஒன்றும் இன்றி
ஜாதி பேதம் ஏதும் இன்றி
அனைவருக்கும் அமுதென
அள்ளி நீரை அளிக்கிறாய்,
சமுத்திரத்தில் கலக்கையில்
சலனமின்றி மறைகிறாய்
உனக்கென்றெதுவும் ஒதுக்காமல்,
உள்ளதெலாம் தியாகம் செய்கிறாய்.
|
|
அன்புடன் அம்மம்மா விசாலம்
இணையப் பாட்டி பக்கம்