![]() |
![]() |
![]() |
|
அன்புக் குழந்தைகளே,
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்: என்ற மஹாகவி பாரதியாரின் வரிகளை நினைவுகொள்வோம். உங்களில் பலர் மிகவும் நன்றாகப் படிக்கக்கூடியவர்கள், சிலருக்குப் படிப்பு கடினமாக இருக்கும், சிலருக்குப் படிக்கவே பிடிக்காது. சிலர் எப்போதும் ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதையே விரும்புவர். சிலர் படிப்பை விட இசை, ஓவியம், நடனம் போன்ற கலைகளில் அதிக ஆர்வமுடையவராக இருக்கலாம். நன்றாகப் படித்தும்கூட சிலர் பரீக்ஷையில் தோல்வியுறலாம். சிலர் ஒரு கலையில் மிக்க ஆர்வமுடையவராயிருந்தும் அவருக்கு அக்கலையில் முறையாகப் பயிற்சி அடைவது கடினமாயிருக்கலாம். இதைப்போல் நம் விருப்பங்களில் சில நிறைவேறலாம், சில நிறைவேறாமல் போகலாம். உங்களது விருப்பம் நிறைவேறும்போது மகிழ்ச்சியடைவதும், நிறைவேறாதபோது வருத்தமடைவதும் இயல்பு. உலக வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் எதையும் சாதிக்கும் மனோவல்லமையும் உங்களுக்கெல்லாம் வரவேண்டுமென்றால். அதற்கு ஒரு வழிகாட்டி அவசியம். அப்படிப்பட்ட வழிகாட்டி உங்களுக்கு உங்களுடைய பெற்றோராகவோ, ஒரு ஆசிரியராகவோ, ஒரு நண்பனாகவோ அல்லது ஒரு நூலாகவோ இருக்கக்கூடும். இத்தகைய வழிகாட்டிகளுள் மிகச்சிறந்ததும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதும், உங்களைக் கவலைகளிலிருந்து நிரந்தரமாக மீட்டு உற்சாகமளிக்க வல்லதுமமாக பகவத் கீதை அமைந்துள்ளது. இது உங்களூக்கெல்லாம் பிரியமானவனும், தீராத விளையாட்டுப் பிள்ளையானவனுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த பொன்மொழிகள். இத்தகைய உன்னதமான கீதையை நமக்கெல்லாம் எளிய நடையிலே, இனிமையான ஒரு தொடராக எடுத்துரைக்க நமது மழலைகள் தளத்தின் ஆன்மீக குருவாய் அமைந்திருக்கும் திரு அசலம் அவர்கள் இசைந்துள்ளார். குழந்தைகள் அனைவரும் எல்லா நலமும் பெற்று, எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றியடைந்து, இடையே சிறு தோல்விகள் ஏற்பட்டாலும் அவற்றால் சிறிதும் கலக்கமடையாமல் வாழ்க்கைப் பாதையின் லட்சியத்தை அடைய வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம். அன்புடன்
ஆகிரா |