Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

இசை

அனைவரையும் மயங்க வைப்பது இசை. இசைக்கு அசையாத உயிர்களே இல்லை எனலாம். இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றார் கவிஞர் கண்ணதாசன். இராமாயண மஹா காவியத்தில் இராவணனைப் பற்றிக் கூறுவது யாதெனில் இராவணன் ஒரு முறை தன் புஜ பலத்தில் கர்வம் கொண்டு சிவபெருமானும் பார்வதி தேவியும் குடியிருக்கும் திருக்கைலாய மலையேயே தூக்க முற்பட்டானாம். அப்போது சிவபெருமான் தன் கட்டை விரலால் அழுத்தவே இராவணனது பத்து சிரங்களும் மலைக் குன்றுகளுக்கிடையே மாட்டிக் கொண்டு அவதிப் பட்டானாம். பின்னர் அவன் சிவபெருமானைக் குறித்து சாம வேதம் பாடவே சிவபெருமான் அவனது இசையால் மயங்கி அவன் மேல் கருணை கொண்டு காலின் அழுத்தத்தை நீக்கவே இராவணன் விடுதலை பெற்றான்.

இப்படி இறைவனையே மயங்க வைக்கும் இசைக்கு மனிதர்கள் அனைவரும் மயங்குவதை நாமறிவோம், அதிலும் குழந்தைகளுக்கு இசை மிகவும் பிரியமான ஒன்று. தொட்டிலில் இட்ட குழந்தை தாயின் தாலாட்டு எனும் இசையைக் கேட்டு உறங்குகிறது.

சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் வித்யாபதி எனும் புலவராக நடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் செல்வாம்பிகை எனும் அரசியாக நடிக்கும் கே.ஆர். விஜயாவுக்கும் நடக்கும் சம்பாஷணை இசையின் மகத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

செல்வாம்பிகை, "இசை பாடும் புலவரல்லவா? உங்களது பேச்சிலே நல்ல அசைவு இருக்கிறது" என, வித்யாபதி, "இசை இல்லையென்றால் உலகில் அசைவே கிடையாது தேவி, பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித வாழ்வோடு பின்னிக் கிடப்பது இசை. குழந்தை பிறந்தவுடன் தொட்டிலிலே இட்டு ஆட்டும் பொழுது தாலாட்டு என்ற இசை, எழுந்து உட்கார்ந்த பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு எனும் இசை, நடக்கும் போது கைவீசம்மா கைவீசு என்ற இசை, பால் சோறூட்டும் போது நிலாவைக் காட்டி, நிலா நிலா ஓடிவா என்ற இசை, பருவமடைந்த பிறகு கும்மி, கோலாட்டம் என்ற இசை, மணவறையிலே அமர்ந்த பிறகு நலுங்கு என்ற இசை, இந்தப் பாழும் பிறவி செத்த பிறகு சுற்றிலும் அமர்ந்து அழுவது ஒப்பாரி என்ன்ற இசை, சர்வமும் இசை" என்பார்.

சிறு குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்த இசை நயமிக்க தமிழ்ப் பாடல்கள் பல. அவற்றைத் தொகுத்துத் தரும் முயற்சியே இப்பக்கம்.

குழந்தைகள் பலர் தொலைக் காட்சியில் இடம்பெறும் பாடல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பழைய திரைப்படப் பாடல்கள் பல தேர்வு செய்யப் படுகின்றன. அத்தகைய பல பாடல்களின் வரிகளைக் குழந்தைகளுக்கு வழங்குவதும் இம்முயற்சியின் நோக்கம் ஆகும்.

திரைப்படப் பாடல்களின் பட்டியல்
தேச பக்திப் பாடல்களின் பட்டியல்
தெய்வ பக்திப் பாடல்களின் பட்டியல்