Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

களிமண்

அத்தியாயம் - 2

ஆகிரா

photograph: Temple
ஆலயம் நிர்மாணிக்கும் பணிக்காக ஸ்தபதி கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யும் சிற்பிகள் சிலரையும், சுதை எனும் மண் கலவையினாலான சிற்ப வேலைப்பாடுகள் செய்யும் கலைஞர்கள் சிலரையும், பணியில் உதவிக்கு வேறு சில பணியாளர்களையும் கும்பகோணத்திலிருந்து வரவழைத்தார்.

ஆலயப்பணி தொடங்கிய நாள்முதலாகவே அவ்வூர்ச் சிறுவர்கள் திருப்பணி நடக்கும் தலத்தைச் சுற்றிச்சுற்றி வந்தனர்.

அவர்களில் முன்னணியில் நின்றவன் நம் குணா. சிறுவர்கள் மட்டுமல்லாது ஊரிலுள்ள ஆண்களும் பெண்களும்கூட தமது ஓய்வு நேரத்தில் திருத்தலத்தை அடைந்து அங்கிருந்த நெடிதுயர்ந்த நிழல்தரும் மரங்களின் அடியில் சற்றே அமர்ந்து அளவளாவிடிட்டுப், பின்னர் தம் இல்லம் திரும்புவது வழக்கமாயிற்று. காவிரியாற்றில் தண்ணீர் பாயும் காலம் இன்னமும் வரவில்லையாதலால் மக்களுக்கு அதிகப் பணிகள் இன்றி நிறைய ஓய்வு நேரம் இருந்தது. அதனால் அவர்கள் ஆலயம் அமையவிருக்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வந்தனர். மொத்தத்தில் ஆலயத் திருப்பணி நடப்பது ஊர் மக்களனைவருக்கும் பெரும் புத்துணர்ச்சியளிப்பதாக அமைந்தது.

தான் இதுவரை வேளியூர்களிலுள்ள சில ஆலயங்களிலும், காலண்டர்களிலும், அவ்வூரிலிருத்த திரையரங்கில் திரையிடப்பட்ட பேசும்படங்களிலும் மட்டுமே பார்த்த தெய்வ உருவங்கள் பல தன் கண்முன்னரே கல்லினாலும் மண்ணின் கலவையாலும் உருவாவதைக் கண்ட குணா வாழ்வில் இதுவரை கண்டிராத பேரின்பம் நெஞ்சில் பொங்கிப் பெருகும் பரவசத்தை உணர்ந்தான். அவனது உள் மனதில் தன் வாழ்க்கைப்பாதை தெய்வத்திரு உருவங்களுடன்தான் தான் அமையப் போகிறதென்று தோன்றியது; அதே நேரத்தில் ஆற்றங்கரைக் கோவில் மணி அடிக்கும் ஒலி கேட்க, பக்திப் பரவசத்தில் குணா தன் நிலை மறந்தான்.

அங்கு வரும் பிற சிறுவர்களனைவரும் திருப்பணி நடைபெறுவதைச் சற்று நேரம் பார்வையிட்ட பின் மற்ற நேரம் மரங்களின் நிழலில் ஓடிப்பிடித்து விளையாடிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கையில் குணா மட்டும் வைத்த கண் வாங்காமல் தெய்வத் திரூஉருவச் சிலைகள் மற்றும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் கற்களும் உருவாவதைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பெரும்பான்மையான நேரத்தைக் கழிப்பதைக் கண்ட ஸ்தபதி அவன் மேல் மிக்க அன்பு கொண்டு அவனுடன் சகஜமாகப் பேசிப்பழகினார்.

"ஐயா, கற்சிலைகளையும் மண் கலவையினாலான திருவுருவங்களையும் மட்டுமே செய்கிறீர்களே, எங்கள் ஊர்க் கோவிலுக்கு வெண்கலச் சிலைகள் கிடையாதா?" என்று நடராஜர் மற்றும் வெண்கலத்தினாலும் ஐம்பொன்னாலும் உருவாக்கப்பட்ட விக்கிரஹங்களை மனதில் கொண்டு கேட்க ஸ்தபதி, "உண்டு குணா, உங்கள் ஊர் ஆலயத்திற்கும் வெண்கலச் சிலைகள் கும்பகோணத்தில் செய்யப்படுகின்றன. அவை திருப்பணி முடிவடையும் தருவாயில் கொண்டு வரப்படும்." என்றார். தம்பி, "இங்கு வரும் எல்லாச் சிறுவர்களும் பெரும்பாலும் விளையாட்டில் நேரத்தைச் செலவிடும்போது நீ மட்டும் சிற்பங்கள் வடிப்பதை ஆர்வத்துடன் பார்க்கிறேயே, உனக்கு சிற்பக் கலையின் மேல் அவ்வளவு ஈடுபாடா?" என ஸ்தபதி குணாவைக் கேட்க, அந்நேரத்தில் அங்கு வந்த வேறு சிறுவன் ஒருவன், "ஐயா, குணாவுக்கு களிமண்ணால் பொம்மைகள் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது, அவன் மண்டையிலும் களிமண்தான் உள்ளது." என்று நையாண்டியாகக் கூறிவிட்டு அவரது மறுமொழியைக் கேட்கக்கூடக் காத்திராமல் ஓடி விட்டான்.



தொடரும் ....

முதல் பாகம்           அடுத்த பாகம்           மற்ற கதைகள்

Your Feedback for this story

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required