ஒரு கடையில் கணக்கெழுதும் வேலை இருந்தது. ஆனால் தாத்தா படிக்காதவராக இருந்ததால் அந்த வேலையும் தாத்தாவுக்குக் கிடைக்கவில்லை. எங்கே வேலை கேட்டுப் போனாலும் என்ன படித்திருக்கிறாய் என்று தான் கேட்டார்கள். அப்போதுதான் சின்ன வயதில் படிக்காதது எவ்வளவு தவறு என்று தாத்தாவுக்கு தெரிந்தது.
அவர்களுக்குச் சொந்தமான சிறிதளவு நிலத்தில் வாழை மரம் பயிர் செய்திருந்தார். வாழைக்குலை பெரிதாகிப் பழுக்கும் போது தான் அதை விற்று இனி அரிசி வாங்க முடியும். அதனால் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி, கொஞ்சமாக சமைத்து சாப்பிட்டார்கள்.
தாத்தா மிகவும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். அப்போது குழந்தைகள் எல்லாம் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் தாத்தாவுக்கும் பள்ளிக்குச் சென்று படிக்க ஆசை ஏற்பட்டது. அதனால் ஒரு குழந்தையை அழைத்து ஆசிரியர் என்ன சொல்லித் தருவார் என்று கேட்டார். அப்போது அந்தக் குழந்தை, "ஆசிரியர் என்ன சொல்லித் தருகிறாரோ? அதை மனப்பாடம் செய்து மறுநாள் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும்" என்று சொன்னது. அதைக்கேட்ட தாத்தா தானும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சொல்லித் தருவதைக் கற்க முடிவு செய்தார்.
தாத்தா பாட்டியிடம் சொல்லிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார். ஆசிரியர் ஒவ்வொரு மாணவ மாணவியை எழுப்பி ஏதோ பாடம் சொல்ல, மாணவர்கள் அதைத் திருப்பிச் சொன்னார்கள். தாத்தா அந்த நேரம் வகுப்பறை வாசலில் வந்து நின்றார்.
ஆசிரியர் அவரைப் பார்த்ததும் அழுக்குத் துணியுடன் பிச்சைக்காரன் போல இருந்ததால்
"யாரைய்யா அது.
எதுக்கு வந்தே,
ஓடிப்போயிடு இங்கேயிருந்து"
என்று உரக்கச் சொன்னார். தாத்தா அசையாமல் நின்றதால் கோபம் கொண்ட ஆசிரியர் கையிலிருந்த பிரம்பை ஆட்டி தாத்தாவைப் போகும்படி சொன்னார்.
ஆசிரியர் போகச் சொன்னதைப் புரிந்து கொண்ட தாத்தா திரும்பி வீட்டுக்குப் போனார். போகும் போது ஆசிரியர் சொன்னதை நினைவு படுத்திக் கொண்டார்.
***யாரைய்யா அது.
எதுக்கு வந்தே,
ஓடிப்போயிடு இங்கேயிருந்து***
இதுதான் தனக்கு ஆசிரியர் கற்றுத் தந்த பாடம் என்று நினைத்துக் கொண்ட தாத்தா அதை மனப்பாடம் செய்து கொண்டே நடந்தார். பாட்டியிடமும் ஆசிரியர் தனக்குப் பாடம் சொல்லித் தந்ததைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.
இரவானதும் தாத்தா தோட்டத்தில் வாழைத்தோப்புக்குக் காவல் காக்கச் சென்றார். அங்கே காவல் மாடத்தில் இருந்தபடியே ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்.
நள்ளிரவானதும் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்தப் பக்கமாக வந்தது. அவர்கள் வாழைத்தோப்பில் உட்கார்ந்து தாங்கள் கொள்ளையடித்ததைப் பங்கிட்டுக கொள்ளலாம் என்று நினைத்தார்கள். எல்லோருமாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளைப் பொருட்களைத் தரையில் பரப்பினார்கள்.
மனப்பாடம் செய்து கொண்டே அயர்ந்து தூங்கிவிட்ட தாத்தா ஏதோ அரவம் கேட்டு அரை விழிப்பில் சத்தமாக மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார்.
"யாரைய்யா அது.
எதுக்கு வந்தே,
ஓடிப்போயிடு இங்கேயிருந்து"
இதைக்கேட்ட திருடர்கள் தாங்கள் வந்ததை யாரோ பார்த்து விட்டார்கள் என்று எண்ணி, தங்கம், வெள்ளி என ஏராளமான கொள்ளைப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு ஓடிப் போய்விட்டார்கள்.
காலையில் எழுந்து வந்த தாத்தா இந்தப் பொருட்களைப் பார்த்து மகிழ்ந்து எல்லாவற்றையும் பாட்டியிடம் கொண்டு போய்க் கொடுத்தார். ஆசிரியரிடம் ஒரு நாள் கற்ற பாடம் இவ்வளவு செல்வத்தைத் தந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார்கள்.
எனவே இதற்கு நன்றியறிதலாக, "ஆசிரியர் வீட்டில் இல்லாத பொருள் எதுவென்று பார்த்து வா? அதை நாம் அவருக்குப் பரிசாகக் கொடுக்கலாம்" என்று பாட்டியிடம் சொன்னார். பாட்டியும் உடனே ஆசிரியரின் வீட்டுக்கு போனார். அங்கே ஆசிரியரின் மனைவி, "இத்தனை நாள் ஆசிரியராக இருந்து என்ன பிரயோசனம்... வீட்டில் ஒரு உலக்கைக்குக் கூட வக்கில்லை" என்று ஆசிரியரிடம் கடிந்து கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட பாட்டி தாத்தாவிடம் வந்து விவரம் சொன்னாள். தாத்தா உடனே சந்தைக்குப் போய் நல்ல உலக்கையாக ஒன்று வாங்கிக் கொண்டு ஆசிரியரைப் பார்க்கப் போனார். தாத்தா தூரத்தில் வருவதைப் பார்த்து விட்ட ஆசிரியர் முந்தின நாள் கிழவரைத் துரத்தியதற்குப் பழி வாங்கவே அடிப்பதற்குth தடியுடன் வருகிறார் என்று எண்ணி வேகமாக எதிர்த்திசையில் ஓடலானார்.
ஒன்றும் புரியாத தாத்தா உலக்கையை ஆசிரியரின் மனைவியிடம் கொடுத்து நன்றி சொல்லி விட்டுப போனார்.
இப்படியாக, பள்ளிக்குப்போய்க் கற்றதால் செல்வந்தரான தாத்தாவும் பாட்டியும் நிறையப் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.