Google
 
Web www.mazalais.com
Enable unicode to view Tamil contents

எந்தையும் தாயும்

இரண்டாம் அத்தியாயம்

ஆகிரா

தந்தையின் தந்தை

முன்னர் ஈரோடு தாலூகாவாக இருந்த இன்றைய பெரியார் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னத்தூரின் அருகாமையிலுள்ள ஆதியூர் எனும் கிராமத்தில் கணக்குப்பிள்ளையாகப் (village officer) பணியாற்றி, பின்னர் அப்பணியைத் தன் மூத்த மகனுக்கு அளித்துவிட்டு சிறிது காலம் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு வைத்தீஸ்வரன் பெற்ற ஐந்து புதல்வர்களுள் கடைசிப் புதல்வராகப் பிறந்தார் என் தந்தை கிருஷ்ணமூர்த்தி. ஒரு அக்காள் மற்றும் ஒரு தங்கையும் அவருடன் பிறந்தனர். திரு வைத்தீஸ்வரன் ஒரு நிலச்சுவான்தாராக இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தன் நிலம் அனைத்தையும் விற்றுவிட்டார்.

"சிறிய குடும்பம் சீரான குடும்பம்", "அளவோடு பெற்று வளமோடு வாழ்" போன்ற குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தல் இல்லாத காரணத்தால் அளவுக்கதிகமான பிள்ளைகளைப் பெற்று அவதியுற்ற "குசேலர்", "நல்லதங்காள்" போன்றோரின் கதைகளைப் படித்தும் கேட்டுமிருந்தாலும் நம் முன்னோர்கள் தங்களையும் தங்கள் பெண்டு பிள்ளைகளையும் காக்கத் தவறி அவர்களை வறுமையில் வாடவிட்டதுபோல் அதே தவறைத்தான் திரு வைத்தீஸ்வரனும் செய்தார்.

"கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங்கொடிது இளமையில் வறுமை
அதனினுங்கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங்கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினுங்கொடிதிங்கவர் கையால்
இன்புற உண்பது தானே"

எனும் ஔவையின் கூற்றுக்கேற்ப இளமையில் வறுமையை அனுபவித்த என் தந்தை பள்ளி இறுதித் தேர்வு எழுதி S.S.L.C. (இன்றைய +1) எனும் நாலெழுத்தைப் பெறுவதற்கு அவருக்கு அடுத்த மூத்த சகோதரன் உதவி செய்தார். அதுவரை அவருக்கு உணவளித்துக் காத்தவர் கோயமுத்தூரில் வசித்துவந்த அவரது மூத்த சகோதரியாவார். அரசுத் தேர்வு (public service commission) எழுதி, தமிழக அரசின் வருவாய்த்துறையில் (Revenue Department) ஒரு சாதாரண குமாஸ்தாவாகப் பணியிலமர்ந்து சில நாட்களில் அவரது அக்காளின் கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றலானதால் என் தந்தை தன் தாய்மாமன் (என் தாயின் தகப்பனார்) திரு விஸ்வநாதன் குடும்பத்துடன் தங்க நேர்ந்தது.

திரு விஸ்வநாதனுக்கு நான்கு பெண்களும் ஒரு மகனும் இருந்தனர். பெண்களுள் மூத்தவரான என் தாய் ஜெயலக்ஷ்மி இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்று திறம்படச் செயல் புரிவதைக்கண்ட என் தந்தை தனக்கு மனைவியாக வாய்க்க வேண்டிய பெண் அவர்தான் எனத் தீர்மானித்து, தன் விருப்பத்தைத் தன் மாமனின் மனைவியிடம் (என் தாயின் தாய்) தெரிவித்து அவரைத் திருமணம் புரிந்துகொண்டார்.

காதலொருவனைக் கைப்பிடித்து அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சிபெறச்செய்து வாழ்வமடி

எனும் மஹாகவியின் வாக்குக்கிணங்க என் தான் என் தந்தைக்கு வாழ்நாள் முழுதும் உற்ற துணையாய் நின்று இல்வாழ்வு நல்வாழ்வாக என்றும் ஆவன செய்தார்.

திருமணமான நாள்முதல் வாழ்நாள் முழுதும் எவ்விதமான பிணக்குமின்றி இனிதாய் இல்லறம் நடத்திய என் தாய் தந்தையர் பெற்ற இரு பிள்ளைகளுள் இளையவன் நான். எனக்குப்பின் இரு இளைய சகோதரிகள் பிறந்தனர். கல்வி பயிலத் தாம் பட்ட கஷ்டம் தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதை மனதில் கொண்டு எங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை அளிப்பதை என் தாயும் தந்தையும் மிகவும் பாடுபட்டு நிறைவேற்றினர்.

நான் சிறு குழந்தையாய் இருந்தபொழுது விளையாடிய விளையாட்டுக்களும் என் தாய்தந்தையருடன் கொஞ்சி மகிழ்ந்தும் பிணங்கி மருண்டதுமான பல சுவையான சம்பவங்கள் என் நினைவிலும், என் தாய்தந்தையர் சொல்லக் கேட்டும் உண்டு.

தொடரும் ...

முந்தைய அத்தியாயம்

Your Feedback for this article

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?

* Required